தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளுக்கு மின்கட்டணம் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் வாக்குறுதியில் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பல வீடுகளுக்கு வழக்கத்தை விட பல மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளது கண்டனத்துக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம், மின் அளவீடு தாமதமாக எடுக்கப்பட்டது, மற்றும் பழுதான மின் அளவீட்டுக் கருவிகள் மீது நடவடிக்கை எடுக்காதது போன்ற காரணங்களால் மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 200 யூனிட் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்கு கிடைக்காமல் போக வேண்டும் என்றே திட்டமிட்டு மின் அளவீடு தாமதப்படுத்தப்பட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
மின் அளவீடு தாமதமானதால், மின் பயன்பாடு 500 யூனிட்களுக்கு மேல் அதிகரித்து, இலவச மின்சாரத்தின் பலன் கிடைக்காமல் போனதோடு, ஒரு யூனிட்டிற்கான கட்டண விகிதமும் உயர்ந்துள்ளது. மின்கட்டண அமைப்பில் உள்ள நடைமுறை மற்றும் தொழில்நுட்பக் குளறுபடிகள், தாமதமான மின்கணக்கீடு ஆகியவையே இந்த திடீர் கட்டண உயர்வுக்கு அடிப்படை காரணங்கள் என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாகக் கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என்றும், அதுவும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே என்றும் அறிவித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதோடு, தற்போது மின்கணக்கீட்டில் குளறுபடிகள் செய்து, வழக்கத்தைவிடப் பல மடங்கு மின்கட்டணம் உயரக் காரணமாகியுள்ளது பெரும் கொடுமையாகும்.
மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்துவதும், மின்னிலக்க அளவீட்டுக் கருவியை விரைந்து பொருத்துவதும் இதுபோன்ற குளறுபடிகள் இனி வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க உதவும். இதன் மூலம் மக்கள் பயன்படுத்தும் அளவிற்கான உண்மையான மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பும் அமையும்.
எனவே, தமிழ்நாடு அரசு மின் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பன்மடங்கு அதிகரித்துள்ள மின் கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இந்த திடீர் கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

