எடப்பாடிக்கு அடிமை இல்லை: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

என் வீட்டில் சாக்கடை ஊற்றும் போது எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்தார் என்பதற்காக காலம் முழுவதும் அவருக்கு அடிமையாக இருக்க முடியாது என்று யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். கரூர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அதிமுக ஒழிய வேண்டும் என்று தவெக நினைக்கவில்லை, எடப்பாடி பழனிச்சாமி தான் நினைக்கிறார். நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு அடிமை இல்லை' என்று திட்டவட்டமாக கூறினார்.

கடந்த ஆட்சியில் ஆளும் அரசை எதிர்த்து கேள்வி கேட்டதால், தனது நண்பர் பெலிக்ஸ் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், விலை உயர்ந்த கேமராக்கள், MAC Editing system போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவற்றை இன்னமும் அவரால் திரும்பப் பெற முடியவில்லை என்றும் சவுக்கு சங்கர் குறிப்பிட்டார். மேலும், இன்று தீண்டத்தகாத கட்சியாக அரசியல் அனாதையாகிவிட்டதாக திமுகவை அவர் விமர்சித்தார்.

தவெக அரசு அவ்வளவு எளிதில் வீழ்ந்துவிடாது என்றும், எதிர்க்கட்சிகள் தவெகவை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள் என்றும் அவர் கூறினார். 'என்னுடைய விசுவாசம், என்னுடைய ஆதரவு மக்களுக்காகத்தான். 2011ல் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என எழுதினேன், 2016ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்பினேன், 2021ல் திமுக ஆட்சிக்கு வர விரும்பினேன். 2026ல் திமுக ஒழிய வேண்டும் என நினைத்தேன், அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைத்தேன். ஆனால் மக்கள் தவெகவை வரவழைத்துள்ளனர்' என்று தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

விஜய்யை கோட்டையில் அமர்த்தியது கரூர் என்றும், அப்போது இருந்த அரசு போதுமான பாதுகாப்பு வழங்காததால் விஜய் சம்பவ இடத்தைப் பார்வையிட முடியவில்லை என்றும் அவர் கூறினார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கரூர் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் சவுக்கு சங்கர் வலியுறுத்தினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version