உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள கெய்காட் கிராமத்தில் உள்ள பஞ்சரூகி கோவிலில் நடக்கவிருந்த திருமணம், மணமகளின் அதிரடி முடிவால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மணமகன் வீட்டார் கொண்டு வந்திருந்த சேலை தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறி, மணமகள் திருமணத்தை மறுத்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
தலன் சாப்ரா கிராமத்தைச் சேர்ந்த அஜய் கோண்டின் மகள் நிகிக்கும், மஹாதானபூர் கிராமத்தைச் சேர்ந்த பவன் கோண்டின் மகன் விஷால் கோண்டுக்கும் இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென மணமகள் நிகி திருமண சடங்குகளில் பங்கேற்க மறுத்துள்ளார். மணமகன் வீட்டார் சீர்வரிசையாக கொண்டு வந்திருந்த சேலை தரமற்றதாகவும், பிடிக்காததாகவும் இருந்ததால் அதை உடுத்த முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மணமகளின் இந்த திடீர் முடிவால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை பயனளிக்காத நிலையில், அது கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் மணமகளின் சகோதரர் ஜீத் நாத் கோண்ட், தாய் உம்ராவதி தேவி மற்றும் லட்சுமி தேவி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் முகமது பாஹிம் குரேஷி கூறுகையில், 'சேலை பிரச்சனை காரணமாக திருமணம் தடைபட்டுள்ளது. மணமகள் தந்தை அஜய் கோண்ட் அளித்த புகாரின் பேரில், மணமகன் விஷால், அவரது உறவினர்கள் பவன், மனோஜ், ஹரேராம் மற்றும் அடையாளம் தெரியாத 4 முதல் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார். இதனால், திருமண மண்டபம் பரபரப்புடன் காணப்பட்டது.

