சேலம்: தொழிலதிபர் வீட்டில் 54 பவுன் நகை, பணம் கொள்ளை!

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் வசிக்கும் தொழிலதிபர் திருஞானம் (42) என்பவரின் வீட்டுக் கதவை உடைத்து 54½ பவுன் தங்க நகைகள், ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் சுமார் ரூ.29 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருஞானம், சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேக்கரிகள் நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி தனது குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். நேற்று மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

கொள்ளை போன பொருட்களில் சுமார் 54½ பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1.05 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கும். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.29 லட்சமாகும். இந்த சம்பவம் குறித்து உடனடியாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version