இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் மொகாலியில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சியில், உடற்தகுதி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா முழு வீச்சில் களமிறங்கியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற முன்னணி வீரர்கள் இருந்தாலும், அனைவரது கவனமும் ரோஹித் சர்மா மீதே இருந்தது. பயிற்சியின் துவக்கத்தில் உடற்பயிற்சி நிபுணர் அட்ரியன் லீ ரூக்ஸ் மேற்பார்வையில் ரோஹித் சர்மா தனது உடற்பயிற்சிகளைத் தொடங்கினார். சக வீரர் இஷான் கிஷன் உடன் இணைந்து சிறிய அளவிலான ஓட்டப் பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது அவருக்கு எந்தவிதமான உடல் சோர்வும் ஏற்படவில்லை.
முழு பேட்டிங் கவசங்களுடன் வலைப்பயிற்சிக்கு வந்த ரோஹித் சர்மா, ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் தனது இயல்பான ஆட்டத்திற்கு திரும்பினார். பந்துகளை வலுக்கட்டாயமாக அடிக்காமல், நிதானமாக விளையாடினார். அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் சிக்சருக்கு பறக்கவிட்டார். பிரின்ஸ் யாதவ் வீசிய யார்க்கர் பந்தையும் லாவகமாக விரட்டினார்.
சுழற்பந்து வீச்சாளர்கள் வலைக்கு மாறியதும், ரோஹித் சர்மா அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுமார் 20 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் ரோஹித் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் தனக்கான இலக்கை தானே நிர்ணயித்து விளையாடி வருகிறார். ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் அவர் ஒரு சதமாவது அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

