திமுகவின் முக்கிய தலைவரும், பிரியங்கா காந்தியின் கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வதேரா, ஹரியானா நில மோசடி தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை இன்று நிபந்தனையின்றி திரும்பப் பெற்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வதேராவின் 'ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி' நிறுவனம், 2008-ம் ஆண்டு 'ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ்' நிறுவனத்திடம் இருந்து சுமார் ₹7.5 கோடிக்கு நிலம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கான காசோலை அளிக்கப்பட்ட போதிலும், பணம் வங்கியில் செலுத்தப்படாமல் நிலத்தின் உரிமை மட்டும் கைமாறியுள்ளது. பின்னர், 2012-ல் அதே நிலத்தை 'டிஎல்எஃப்' நிறுவனத்திற்கு ₹58 கோடிக்கு விற்று, பலமடங்கு லாபம் ஈட்டியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் பெரிய அளவில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேருக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து ராபர்ட் வதேரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள், நிலம் வாங்கப்பட்ட காலத்திற்குப் பிறகுதான் சேர்க்கப்பட்டன என்றும், பழைய வழக்கிற்கு புதிய சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வதேரா தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், வதேரா தரப்பு வாதத்தை அமலாக்கத்துறை கடுமையாக எதிர்த்ததுடன், அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கோரியது.
இதற்கிடையே, ராபர்ட் வதேரா கடந்த 16-ம் தேதி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றார். இந்த சூழ்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவை நிபந்தனையின்றி திரும்பப் பெறுவதாக அவரது தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்தது.

