நதிகள் இணைப்புத் திட்டம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்

கோதாவரி-காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஒரு விரிவான கடிதத்தை எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் நீர் ஆதாரப் பற்றாக்குறை மற்றும் மாநிலத்தின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உள்ள சவால்களை இந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது கடிதத்தில், தமிழ்நாடு இயல்பாகவே மேற்பரப்புநீர் வளங்களில் பற்றாக்குறை கொண்ட மாநிலம் என்றும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்திருப்பதாகவும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசு தொடர்ச்சியான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டியுள்ளது என்றும், பல பகுதிகளில் அது அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலை தொடர்வதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மேற்பரப்புநீர் வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாக கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் திகழ்கிறது என்றும், தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் போன்ற தென் மாவட்டங்கள் தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அம்மாவட்டங்களின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிரந்தரமானத் தீர்வாக கோதாவரி-காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியம் என்றும், இத்திட்டத்தினால் வெள்ள உபரிநீரை நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிட வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA) கோதாவரி-பெண்ணாறு-பாலாறு-வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தற்போதுள்ள DPRயில் உள்ள சீரமைப்பு வழி, காவிரி ஆற்றிற்கு சில கிலோமீட்டர் முன்னதாகவே முடிவதால், அதற்குப் பதிலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி-காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய நலனைக் கருத்தில்கொண்டு, ஆக்கப்பூர்வமான கலந்தாலோசனை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கருத்துவேறுபாடுகளைத் தீர்த்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதில் தாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார். சமூகப் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட, அதற்கு “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்” என்ற அந்தஸ்தை வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

ஒருங்கிணைந்து செயல்படுத்துதல், உத்திரவாதமான நிதி ஒதுக்கீடு மற்றும் குறித்த காலத்தில் திட்டத்தை முடிப்பது ஆகிய நோக்கத்திற்காக, ஒன்றிய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்கேற்புடன் ஒரு பிரத்யேக ‘சிறப்பு நோக்கு அமைப்பை’ (Special Purpose Vehicle) உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும் என்றும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைவாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு அர்ப்பணிப்புடன் அனைத்து ஒத்துழைப்பும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

எனவே, ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கும் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு இந்தியப் பிரதமர் அவர்களை முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்: i. தொடர்புடைய மாநிலங்களுடன் பயன்பெறும் ஆலோசனைகளை விரைவுபடுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் விரைவான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். ii. காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவணை வரை இந்த இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான அறிக்கையை (DPR) இறுதி செய்யவேண்டும்; iii. இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக விரைவான முறையில் (Fast Track Method) அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல்; மற்றும் iv. இத்திட்டத்தை ஒருங்கிணைந்த மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்திட ஒரு சிறப்பு நோக்கு அமைப்பை நிறுவுவது குறித்துப் பரிசீலிப்பது மற்றும் இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்தல். இத்திட்டம் தொடர்பாக இந்தியப் பிரதமர் அவர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி, தென்னிந்தியாவின் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நமது சிறப்பான நீர் வளங்களைச் சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவது என்ற தேசிய குறிக்கோளை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version