இளைஞர்களே உஷார்! சமூக வலைதளங்களில் 'வாடகை காதலன்' என்ற பெயரில் புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது. கவர்ச்சியான ஆண்களின் புகைப்படங்களுடன், சலுகை விலையில் வாடகை காதலன் வேண்டுமா? என்ற விளம்பரங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ஒரு மணி நேரம் ஜோடியாக காபி அருந்த ரூ.499, சினிமா செல்ல ரூ.1,249 என பல்வேறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் 1ஆம் தேதியை முன்னிட்டு 50 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது சைபர் குற்றவாளிகளின் சதி என்று ஹைதராபாத் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காதலன் வாடகைக்கு' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் சைபர் குற்றவாளிகளின் கைவரிசை. யாரும் இந்த மோசடி விளம்பரங்களை நம்ப வேண்டாம். ஆன்லைன் உரையாடல்களை நம்பி, முன்பின் தெரியாத நபர்களை நேரில் சந்திக்கச் சென்றால், அவர்கள் உங்களை எளிதில் சிக்க வைத்துவிடுவார்கள். காதல் என்ற பெயரில் பொய் சொல்லி ஏமாற்ற பல வாய்ப்புகள் உள்ளன.
அரட்டையின் போது தந்திரமாகப் பெறப்படும் தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கலாம். இதற்கு காரணமானவர்கள் உடனடியாகக் கண்டறியப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் சமூக ஊடகங்களில் என்ன பார்க்கிறார்கள், யாரிடம் பேசுகிறார்கள், வெளியே யாரைச் சந்திக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மீது முறையான மேற்பார்வை இல்லாவிட்டால், அப்பாவி குழந்தைகள் மோசடிக்காரர்களின் வலையில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்ற இணையவழி மோசடிகளில் யாரேனும் சிக்கினாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான பதிவுகளைக் கண்டாலோ, பீதியடையாமல் உடனடியாக 1930 என்ற இணையக் குற்ற உதவி எண்ணை அழைக்கவும் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கவனமாகப் பார்த்து, அவர்களை இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த புதிய வகை மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர்கள் இதுபோன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறாமல், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே நம்ப வேண்டும் என்றும், தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருப்பது அவசியம். இதுபோன்ற மோசடிகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள, போலீஸார் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுவது முக்கியம். சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதன் மூலம், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உதவ முடியும்.

