ரவி மோகனின் குற்றச்சாட்டுகள் பொய்: ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் பதில்

நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல விழாக்களில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். இதுகுறித்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தனது கண்டனத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனிடையே, பாடகி கெனிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சென்னையை விட்டு செல்வதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை ஜெயம் ரவியின் மனைவி மற்றும் தாயார், ஒரு நடிகை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

சுஜாதா விஜயகுமார் தனது விளக்கத்தில், 'ஆர்த்தி தன்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டதாக ரவி மோகன் கூறுவது முற்றிலும் பொய். யார் யாரை மிரட்டி திருமணம் செய்துகொண்டார்கள் என்பது விரைவில் வெளிவரும். ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டால், மற்ற பெண்கள் நிச்சயம் குரல் கொடுப்பார்கள். எனது மருமகன் ரவி மோகன் மீது எனக்கு இன்னும் மரியாதை உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 'ஒன்றரை வருடங்களாக நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை இப்போது ரவி மோகன் பேசியுள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் தவறு செய்யாததால் அழவோ, உணர்ச்சிவசப்படவோ மாட்டேன். ரவியின் பேச்சால் குழந்தைகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை என்பதும் பொய். என் மீதான அவதூறுகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பேன். திருமணத்திற்குப் பிறகு ஒரே வங்கி கணக்கை வைத்திருப்பது தவறில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுவரை இதுகுறித்து நான் பேசவில்லை. அனைத்து பெற்றோரும் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள்' என்றும் சுஜாதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version