வரும் ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை அன்று ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ஒரு அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த நிகழ்வில் நிலவின் பெரும்பகுதி மறைக்கப்பட்டு, முழு சந்திர கிரகணம் போல காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த அரிய வானியல் நிகழ்வை இந்தியாவில் இருந்து காண இயலாது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும். அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுவதால், சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இந்த நிகழ்வு 'ரத்த நிலவு' (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது.
வழக்கமான பகுதி சந்திர கிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மறைக்கப்படும். ஆனால், இந்த முறை நிகழவிருக்கும் கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் சுமார் 96% பகுதி பூமியின் நிழலால் மூடப்படும். நிலவின் விளிம்பில் வெறும் 4% மட்டுமே வெளிச்சமாக இருக்கும்.
முழு சந்திர கிரகணத்தின் போது மட்டுமே நிலவு பொதுவாக சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும். ஆனால், இந்த பகுதியளவு கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது முழு சந்திர கிரகணத்தைப் போலவே ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனால் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வானியல் வல்லுநர்களின் கணிப்பின்படி, வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகத் தெரியும். சுமார் 100 கோடி மக்கள் இந்த அரிய நிகழ்வை நேரடியாகக் காண வாய்ப்புள்ளது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் இது பகுதியளவு தெரியும்.
துரதிர்ஷ்டவசமாக, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசிபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது. இந்திய நேரப்படி ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலை இந்த கிரகணம் நிகழ்கிறது. காலை 8:04 மணிக்கு தொடங்கி, காலை 9:43 மணிக்கு உச்சக்கட்டத்தை அடைந்து, காலை 11:22 மணிக்கு முடிவடையும். இந்தியாவில் இக்காலகட்டத்தில் பகல் நேரம் என்பதால், இந்த கிரகணத்தை நம்மால் காண இயலாது.

