இந்திய ரயில்வே தனது 'ரயில் ஒன்' செயலி மூலம் பயணிகளுக்கு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் பிற சேவைகளை ஆன்லைனில் எளிதாகப் பெறுவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த செயலி, பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 2.57 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். தினசரி 7.64 லட்சம் டிக்கெட்டுகள் இந்த செயலி வழியாக எடுக்கப்படுகின்றன.
ரயில் ஒன் செயலி, ரயில் முன்பதிவு டிக்கெட், சாதாரண டிக்கெட், நடைமேடை டிக்கெட், பி.என்.ஆர். ஸ்டேட்டஸ், ரயில் இருப்பிடம் போன்ற பல்வேறு ஒருங்கிணைந்த சேவைகளை ஒரே இடத்தில் வழங்குகிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு 3 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. பயணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இந்த 3 சதவீத கட்டணச் சலுகை வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளுக்கு 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் சலுகை, 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளன.
'அன்-ரிசர்வ்டு' டிக்கெட்டுகளை ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் பயணிகள், பயணத்தின் போது தங்கள் மொபைலில் உள்ள செயலியை நேரடியாக காண்பிக்க வேண்டும் என இந்திய ரயில்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஸ்கிரீன்ஷாட்டுகள், PDF வடிவங்கள் அல்லது வாட்ஸ்அப் பார்வேர்டுகள் பயணச் சீட்டாக ஏற்றுக்கொள்ளப்படாது.
டிடிஇ (டிக்கெட் பரிசோதகர்) சோதனையின் போது, போனில் உள்ள செயலியை நேரடியாகக் காட்டாமல், ஸ்கிரீன்ஷாட் அல்லது வாட்ஸ்அப் பார்வேர்டைக் காண்பிக்கும் பயணிகள், டிக்கெட் இல்லாதவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு ரயில்வே விதிமுறைகளின்படி கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணம், ஒரே டிக்கெட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலருக்குப் பகிர்ந்து, ஒரே கட்டணத்தில் பல நபர்கள் பயணம் செய்யும் முறைகேடுகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இந்த முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வேயின் இந்த புதிய அறிவிப்புகள், டிக்கெட் முன்பதிவு செயல்முறையை எளிதாக்குவதோடு, பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளையும் வழங்குகின்றன. அதே சமயம், முறைகேடுகளைத் தடுப்பதன் மூலம் நேர்மையான பயணிகளுக்குப் பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதி செய்கின்றன.

