புதுச்சேரி மக்களுக்கு ஒரு நற்செய்தி! சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆகஸ்ட் 24) தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
வீடு கட்டும் திட்டத்தில் நிதியுதவி உயர்வு: பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் நிதியுதவி, தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 1,150 பயனாளிகளுக்கு ரூ.15.95 கோடி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் மேலும் 2,500 பயனாளிகளுக்கு ரூ.29.15 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச பயிற்சி: புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம், ஏழை மற்றும் கல்வித்திறன் மிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. புகழ்பெற்ற பயிற்சி நிறுவனம் மூலம், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி இரண்டு மாதங்களுக்குள் தொடங்கப்படும்.
விவசாயிகளுக்கான கோடை உழவு நிதியுதவி: காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு, கோடை உழவு பணிகளுக்காக ஹெக்டேருக்கு ரூ.1,500 வீதம் நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.13 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் கன்றுகளுக்கு இலவச காப்பீடு: கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், 4 முதல் 8 மாத வயதுடைய அனைத்து பெண் கன்றுகளுக்கும் கன்றுக்கு ரூ.1,500 வீதம் இலவச காப்பீடு வழங்கப்படும். மேலும், கால்நடை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், விவசாயிகளை ஊக்குவிக்கவும் புதுச்சேரி முழுவதும் மருத்துவ முகாம்கள் மற்றும் செல்லப் பிராணிகள் கண்காட்சிகள் நடத்தப்படும்.
அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி: பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் தேசிய அளவில் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்வதை உறுதிசெய்யும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் நீட் மற்றும் ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மேலும், குடிமைப் பணி, வங்கிப் பணி மற்றும் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொகுப்பு: புதுச்சேரி மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியுடன், கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை மற்றும் நெய் அடங்கிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொகுப்பாக வழங்கப்படும்.
மீனவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மானியம்: நடப்பு நிதியாண்டில், 1,000 மீனவ சமூக முதியோர்களுக்கு 'முதியோர் ஓய்வூதியம்' வழங்கப்படும். மேலும், பிரதமர் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பெண் மீனவ பயனாளிகளுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்க 30% மானியமும், ஆண் மீனவ பயனாளிகளுக்கு 50% மானியமும் வழங்கப்படும். மீன்பிடி வலைகள் வாங்கவும் 50% மானியம் வழங்கப்படும்.
மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பாடு: ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் சிடி ஸ்கேனர் அமைக்கப்படும். மேலும், கரிக்கலாம்பாக்கம், திருநள்ளார், காட்டேரிக்குப்பம் ஆகிய இடங்களில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படும். மண்ணாடிப்பட் சமுதாய நல மையத்தில் டிஜிட்டல் கதிரியக்கவியல் கருவி நிறுவப்படும்.
கல்வி உதவித்தொகை மற்றும் டிஜிட்டல் பயிற்சி: புதுச்சேரி வக்ஃபு வாரியம் மூலம் சுமார் 705 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.21 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த, தகவல் தொழில்நுட்பத் துறையில் 150 மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகையுடன் 12 மாத காலத்திற்கு 'டிஜிட்டல் பயிற்சி பணிவாய்ப்பு' வழங்கப்படும்.
நவீன சிறைச்சாலை: சிறை நிர்வாகத்தை நவீனப்படுத்தும் வகையில், முழு உடல் ஸ்கேனர்கள் மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்புகள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

