சட்டமன்றத்தில் தனி மனித துதி: பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

சட்டமன்ற நிகழ்வுகளை எந்தவித இடையூறும் இன்றி நேரலை செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'சட்டப்பேரவையில் ஒரு கட்சியைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் துதி பாடுகிறார்கள். இது உங்கள் புகழைப் பேசுவதற்காகவா சட்டமன்றம்? பேச வேண்டிய விஷயங்களைப் பேசாமல், பேரவை திசை மாறிச் செல்கிறது. இது வேதனை அளிக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் பேரவைக் கூட்டத்தை மக்கள் பார்க்க விடாமல் தடுப்பது சரியல்ல' என்று கூறினார்.

மேலும், 'சுதந்திரம் பெற்றது முதல் காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனைகள் என நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். நமது உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்றோர் இதற்காகப் போராடியுள்ளனர். தாய்ப்பால் போல தண்ணீர் முக்கியமானது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைக்காக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். எப்படி மின் மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கினோமோ, அதேபோல் நீர் மிகை மேலாண்மை மாநிலமாகவும் உருவாக்க வேண்டும்' என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரிடம் நமது முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் என்றும், சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்தே காவிரி, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சனை போன்ற எதற்கும் இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version