இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு பிரதமருக்கு கோயில் கட்டும் அசாதாரண தீர்மானம் பீகாரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாட்னா நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரம்மாண்டமான கோயில் கட்ட திருநங்கைகள் நல வாரியம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த கோயிலில் பிரதமர் மோடியின் உயரத்திற்கு தங்கச் சிலை நிறுவப்பட உள்ளது.
இந்த பிரம்மாண்ட கோயில் கட்டும் திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.112 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பாட்னா நகரின் முக்கியப் பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கோயில் வளாகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்திய வரலாற்றில் ஒரு பிரதமருக்காக கட்டப்படும் முதல் கோயிலாக அமையும்.
இது குறித்து கார் மாநில கின்னார் நல வாரியத்தின் உறுப்பினர் ராஜன் சிங் ஒரு பிரபல செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், 'திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உதவி ஆய்வாளராகவோ, மருத்துவர்-பொறியாளராகவோ ஆவார்கள் என்றோ, அல்லது எங்களைப் போன்றவர்கள் இந்த வாரியத்தின் உறுப்பினர்களாக்கப்படுவார்கள் என்றோ உங்களால் எப்போதாவது கற்பனை செய்து பார்க்க முடிந்ததா?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், '2019-ல் மோடி அரசு இயற்றிய திருநங்கைகள் பாதுகாப்புச் சட்டம் எங்கள் தலைவிதியை மாற்றியது. இன்று, இந்தச் சட்டத்தின் காரணமாக, பீகாரில் திருநங்கைகள் ஆய்வாளர்களாகவும், காவலர்களாகவும் ஆகி வருகின்றனர். அதனுடன், கின்னர் சமூகத்தைச் சேர்ந்த எங்களைப் போன்றவர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாகவும் துணைத் தலைவர்களாகவும் ஆக்கப்படுகிறார்கள்,' என்று அவர் தெரிவித்தார்.
ஜூலை 29 அன்று நடைபெற்ற வாரியத்தின் முதல் கூட்டத்தின்போது, பிரதமர் மோடிக்கு ஒரு பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட வேண்டும் என்று தாம் முன்மொழிந்ததாக சிங் கூறினார். இந்தத் தீர்மானம் வாரியக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட ஒப்புதலுக்காகவும் நிதி ஒதுக்கீட்டிற்காகவும் பீகார் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநில அரசு நிலத்தை அடையாளம் கண்டு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியவுடன், இதற்கான கட்டுமானப் பணிகள் உடனே தொடங்கும் என வாரியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோயில் திட்டம், திருநங்கைகள் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் என்ற அறிவிப்பு வெளியாகி இருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுத்த தலைவருக்கு அவர்கள் காட்டும் அன்பு மற்றும் நன்றி என ஒரு தரப்பினர் வரவேற்றாலும், மற்றொரு தரப்பினர் இவ்வளவு பெரிய நிதியை கோயில் கட்டுவதற்குப் பதிலாக திருநங்கைகளின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவத்திற்காக நேரடியாகப் பயன்படுத்தலாம் என பதிவிட்டு வருகின்றனர். இந்த விவாதம் சமூகத்தில் பல்வேறு கோணங்களில் நடைபெற்று வருகிறது.

