இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: சுவீடன் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு!

ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடனில் அந்நாட்டு தொழில் அதிபர்களைச் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், இரு நாடுகளின் உறவை உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது. வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஸ்வீடன்-இந்தியா இடையிலான தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு பாதையை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றுவோம் என மோடி தெரிவித்தார். கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஸ்வீடனிடம் இருந்து கிடைத்த ஆதரவிற்காக பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு நன்றி தெரிவித்தார்.

கோதன்பெர்க் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய தொழில்துறை வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஸ்வீடனின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் உரையாடினார். இந்தியாவின் சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய மோடி, உற்பத்தித்துறை, தூய்மையான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஸ்வீடன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தியாவின் இளம் தொழிலாளர் சக்தி, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் தொழில் செய்வதை எளிதாக்கும் சூழல் ஆகியவை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு முக்கிய நன்மைகளாகும் என மோடி குறிப்பிட்டார். முன்னதாக, ஸ்வீடனின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார் – கமாண்டர் கிராண்ட் கிராஸ்' பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா-ஸ்வீடன் உறவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version