அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது அசாம் மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவதைக் குறிக்கிறது.
குவஹாத்தியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் மற்ற அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் பல மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
பாரம்பரிய 'கமோசா' துண்டு அணிந்து, வேட்டி-குர்தா உடையில் வந்த ஹிமந்த பிஸ்வா சர்மா, அசாமிய மொழியில் பதவி ஏற்றார். அவருடன், பா.ஜ.க-வைச் சேர்ந்த ராமேஸ்வர் தெலி, அஜந்தா நியோக், அசோம் கண பரிஷத் கட்சியின் அதுல் போரா மற்றும் பி.பி.எஃப் கட்சியின் சரண் போரா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இவர்களில் தெலி, போரா, நியோக் ஆகியோர் அசாமிய மொழியிலும், சரண் போரா போடோ மொழியிலும் பதவி ஏற்றனர்.
பதவியேற்பு விழா முடிந்ததும், பிரதமர் மோடி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுகுறித்து முதலமைச்சர் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், 'அன்னை காமாக்யா, மகபுருஷ ஸ்ரீமந்த சங்கர்தேவ் மற்றும் அசாம் மக்களின் ஆசியுடன் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளேன். அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், அவர்களுக்கு சேவை செய்யவும் காத்திருக்கிறேன். அசாம் மாநிலம் வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொடும்' என்று பதிவிட்டுள்ளார். முந்தைய அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த அஜந்தா நியோக், வேளாண் அமைச்சராக இருந்த அதுல் போரா, போக்குவரத்து அமைச்சராக இருந்த சரண் போரா ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரான ராமேஸ்வர் தெலி, மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பியுள்ளார்.

