விரல் சொடக்கு போட்டு விக்கெட்: வீரருக்கு சஸ்பெண்ட்

கிரிக்கெட் போட்டியில் நடந்த வினோத சம்பவம்

இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நடந்த ஒரு வினோதமான ஏமாற்று வேலை, கிரிக்கெட் உலகை அதிர்ச்சியிலும், அதே சமயம் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் நார்டன் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சால்ட்பர்ன் அணியின் ஃபீல்டர் பிரையன் டிவைன், பேட்ஸ்மேன் பந்தை அடிக்க முயன்றபோது, பந்து பேட்டில் படாத நிலையிலும், பேட்டில் பட்டது போன்ற ஒரு 'சொடக்கு' சத்தத்தை தன் விரல்களால் எழுப்பியுள்ளார்.

இந்த சொடக்கு சத்தத்தைக் கேட்டு ஏமாந்த நடுவர், பந்து பேட்டின் விளிம்பில் பட்டதாக நம்பி, பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுத்துவிட்டார். பேட்ஸ்மேன் பந்து பேட்டில் படவே இல்லை என முறையிட்டும், நடுவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏமாற்று வேலையை அரங்கேற்றிய வீரருக்கு, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் நையாண்டிப் பெயரைப் பயன்படுத்தி, 'கிளிக்கி பாண்டிங்' என்று நெட்டிசன்கள் பெயரிட்டுள்ளனர். ரிக்கி பாண்டிங் சில சமயங்களில் பந்து பேட்டில் படாமலேயே கேட்ச் பிடித்தது போல் நடிப்பார் என்பதால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடுவரை ஏமாற்றி விக்கெட் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, எக்ஸ் தளத்தில் மட்டும் 75 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.

இதனையடுத்து, சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப் நிர்வாகம் உடனடியாக வீரர் பிரையன் டிவைனை சஸ்பெண்ட் செய்துள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கும் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய விவகாரம் என கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சீசன் மற்றும் எதிர்கால போட்டிகளில் விளையாட அந்த வீரருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்து வீசியோ, சரியாக ஃபீல்டிங் செய்தோ விக்கெட் எடுக்க முடியாமல், இப்படி சொடக்கு போட்டு விக்கெட் எடுக்கும் 'திறமைசாலிகள்' கிரிக்கெட்டிற்கு தேவையா என்று நெட்டிசன்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கிரிக்கெட்டின் நேர்மை மற்றும் நியாயமான விளையாட்டுத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவம், விளையாட்டுத் துறையில் இதுபோன்ற ஏமாற்று வேலைகள் நடைபெறுவது வருத்தமளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version