பரந்தூர் விமான நிலையம்: விஜய் ஈகோவை கைவிட வேண்டும் – வானதி சீனிவாசன்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட்டதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளும் செயல் என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். பரந்தூரிலேயே விமான நிலையம் அமைக்க முதலமைச்சர் தனது ஈகோவைக் கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், "விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், புதிய விமான நிலையம் அமைப்பதற்குப் பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில் வானதி சீனிவாசன் மேலும் கூறுகையில், "பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிற்குப் புதிய விமான நிலையம் என்பது மிக அத்தியாவசியமானது. ஏற்கனவே பெங்களூரு, ஐதராபாத் போன்ற விமான நிலையங்கள் சென்னை விமான நிலையத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு, பெரும்பகுதி நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, அதை ரத்து செய்வது மிக மோசமான முன்னுதாரணமாகும். இது தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை வெகுவாகப் பாதிக்கும். ஆட்சி மாறியதும் திட்டத்தைத் தொடர முடியாது என்ற அச்சம் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"தற்போது அனைத்து மாநிலங்களும் போட்டிபோட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் சூழலில், விஜய் அரசின் இந்தச் செயல்பாடு, இருக்கும் முதலீட்டாளர்களையும் வெளியேற்றிவிடுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது. புதிய இடம் தேர்வு செய்து விமான நிலையம் அமைப்பது எளிதான காரியம் அல்ல. விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்குப் பாதிப்பின்றி தமிழ்நாட்டில் 6,000 ஏக்கர் நிலம் கிடைப்பது சாத்தியமில்லை. புதிய இடத்தைத் தேர்வு செய்தால் அங்கும் விவசாயிகள் போராட்டம் பரந்தூரைவிட வீரியமாக இருக்கும்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடினோம் என்ற ஒரே காரணத்திற்காக அந்தத் திட்டத்தை ரத்து செய்வது சரியானது அல்ல. எனவே, முதலமைச்சர் விஜய் தனது ஈகோவைக் கைவிட்டு, பரந்தூரிலேயே விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தைத் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதையும், புதிய விமான நிலையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களின் விவரங்களையும் உடனடியாக வெளியிட வேண்டும்" என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

"புதிய விமான நிலையம் அமைக்க சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுவரை சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால், சென்னைக்குக் குறைந்தது 10 ஆண்டுகளுக்குப் புதிய விமான நிலையம் வராது என்ற அச்சம் தொழில்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை உணர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்பட வேண்டும். பரந்தூரிலேயே விமான நிலையத்தை அமைக்க வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version