சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்திருப்பது குறித்து 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை முதல்வர் உடனடியாக அறிவித்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அறிவிக்காவிட்டால் அது மாநிலத்தின் வளர்ச்சியைப் பின்தள்ளிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முதல்வர் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தாலும், சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள மாற்று இடத்தைக் குறிப்பிட்டிருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புதிய விமான நிலையத்திற்கான இடத்தை தீர்மானிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால், அது மாநிலத்தின் வளர்ச்சியைக் குறைந்தது 10 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பரந்தூருக்குப் பதிலாக வேறொரு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க அரசு விரைவில் முடிவெடுத்தாலும், அதற்கான இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளின் ஒப்புதலைப் பெறுவது, ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிடுவது, நிலத்தைக் கையகப்படுத்துதல், உரிமங்களைப் பெறுதல் என அனைத்து நடைமுறைகளும் முடிந்து விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மற்ற மாநிலங்கள் முன்னேறிச் சென்று தமிழகத்தை பின்தங்கச் செய்துவிடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
இன்றைய தரநிலைகளின்படி, சென்னையில் உள்ள தற்போதைய விமான நிலையம் போதுமானதாக இல்லை. சென்னை விமான நிலையம் வெறும் 1,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால் ஹைதராபாத் விமான நிலையம் 5,500 ஏக்கர், பெங்களூர் 4,000 ஏக்கர், நவி மும்பை 2,866 ஏக்கர், தில்லி விமான நிலையம் 5,100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளன. மேலும், சென்னையில் விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் போக்குவரத்தைப் பெறுவது சிரமமாக உள்ளது.
ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக விளங்கிய சென்னை, இன்று ஆண்டுக்கு 3 கோடி பயணிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. தில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன. போதுமான டாக்ஸிவேக்கள் மற்றும் ஏரோபிரிட்ஜ்கள் இல்லாததால், சென்னை விமான நிலையம் 'கோடு எப்' விமான நிலையமாக வகைப்படுத்தப்படவில்லை. இதனால் A380 போன்ற பெரிய ரக விமானங்களை இங்கு தரையிறக்குவது சாத்தியமற்றதாக உள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களால் மட்டுமே பெரிய ரக விமானங்களைக் கையாள முடிகிறது.
எனவே, சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்திற்கு ஏற்ற இடத்தை அரசு விரைந்து அறிவிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அரசியல் கட்சிகள் வரலாம், போகலாம். அரசுகள் மாறலாம். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, அன்றைய அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லாததால் உருவான விமான நிலையம் என நினைத்துவிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான செய்திகளின்படி, பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்குத் தேவைப்படும் 5,746 ஏக்கர் நிலத்தில் 1,700 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளது. கையகப்படுத்தப்பட்ட இந்த நிலத்தை மாநில அரசு இப்போது என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

