அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒரு வீரருக்கு சுமார் 24 லட்சம் ரூபாய் கட்டணம் கேட்பதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண அறிவிப்பால் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் அணி உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தை ஒரு வகையான பணம் பறிக்கும் செயல் என அணி உரிமையாளர்கள் வர்ணித்துள்ளனர். மேலும், பாகிஸ்தான் வீரர்களைத் தங்கள் அணிகளில் ஒப்பந்தம் செய்வதில் மறைமுகத் தடை விதிக்கவும் அவர்கள் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேஜர் லீக் கிரிக்கெட் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கசிந்த தகவல்களின்படி, ஒவ்வொரு பாகிஸ்தான் வீரருக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 25,000 அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 24 லட்சம் ரூபாய் கட்டணமாகக் கேட்பதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதிகளின்படி, இந்த சான்றிதழ் இல்லாமல் வெளிநாட்டு வீரர்கள் எந்தவொரு லீக் போட்டிகளிலும் விளையாட முடியாது. தற்போது நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் மட்டுமே சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது சான்றிதழ் கட்டணத்தை அந்த அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பொதுவாக, ஐபிஎல் போன்ற பெரிய கிரிக்கெட் தொடர்களில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடும்போது, அவர்களது சொந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு ஒப்பந்தத் தொகையில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் செலுத்தப்படுவது வழக்கம். ஆனால், மேஜர் லீக் கிரிக்கெட் போன்ற ஒப்பீட்டளவில் சிறிய தொடர்களில் இதுபோன்ற விதிகள் எதுவும் இதுவரை இருந்ததில்லை.
உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டுமே இதுபோன்ற கட்டணத்தைக் கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படும் போது இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல், மாற்று வீரர்களைத் தேர்வு செய்ய முடியாத கடைசி நேரத்தில் பிசிபி இந்த நிபந்தனையை விதிப்பதாக அணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வியின் கவனத்திற்கு அணி உரிமையாளர்கள் கொண்டு சென்றுள்ளனர். முறையான கொள்கைகள் ஏதுமின்றி இவ்வளவு பெரிய தொகையைக் கேட்பது முறையற்றது என்று அவர்கள் வாதிட்டனர். இருப்பினும், தங்களது வீரர்களை அனுப்ப இந்தக் கட்டணத்தைக் கேட்பது தங்களது உரிமை என்று நக்வி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கட்டணத்தைச் செலுத்தினாலும் அதற்கான எந்த உத்தரவாதமும் வழங்கப்படுவதில்லை என்றும், தேவைப்பட்டால் பிசிபி தடையில்லா சான்றிதழை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிய கட்டணம் கேட்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் வீரர்களைத் தங்கள் அணிகளில் ஒப்பந்தம் செய்வதைத் தவிர்க்க மேஜர் லீக் கிரிக்கெட் அணிகள் முடிவு செய்துள்ளன.
இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் அதிகமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, உலகக்கோப்பை தொடருக்கான விதிகளை மாற்றியமைக்க ஐசிசி பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

