பச்சையப்பன் கல்லூரிக்கு இருபாலர் அந்தஸ்து: தமிழக அரசு வரலாற்று முடிவு!

184 ஆண்டுகளாக ஆண்களுக்கான கல்லூரியாக செயல்பட்டு வந்த சென்னை பச்சையப்பன் கல்லூரி, இனி இருபாலரும் பயிலும் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை குறைந்து வரும் அரசு ஆடவர் கல்லூரிகளின் நிலையை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நந்தனத்தில் உள்ள ஆடவர் கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்ட நிலையில், தற்போது 184 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சையப்பன் கல்லூரிக்கும் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வர் பேபி குல்னாஸ் கூறுகையில், 'இந்த இருபாலர் அந்தஸ்து, கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இது அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்கிறது. மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்' என்று தெரிவித்தார். மேலும், இந்த முடிவை கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வித் துறைக்கு கல்லூரி நிர்வாகம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது. அறிவு, நற்பண்பு, தலைமைத்துவத்தை வளர்க்கும் பச்சையப்பன் கல்லூரி, இந்த புதிய அத்தியாயத்தின் மூலம் முன்னேற்றமிக்க எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் என்று முதல்வர் பேபி குல்னாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version