தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், இன்று முதல் ஆன்லைன் சுய கணக்கெடுப்பு தொடங்குகிறது. இந்த கணக்கெடுப்பில் மக்கள் தங்கள் விவரங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தமிழ்நாடு இயக்குநர் சுந்தரேஷ் பாபு தெரிவித்துள்ளார். நாட்டில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1881 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக, 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்த ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, அந்த பணிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த முறை, கணக்கெடுப்பு முதன்முறையாக 'டிஜிட்டல்' வழியாக நடத்தப்பட உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பானது, 'வீடு விபர பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு' மற்றும் 'மக்கள்தொகை கணக்கெடுப்பு' என, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டமாக, வரும் ஆகஸ்ட் 1 முதல் 30 ஆம் தேதி வரை, வசிக்கும் வீடு பற்றிய விவரங்களை சேகரிக்கும் பட்டியல் மற்றும் வீடுகள் எத்தனை என்ற கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
அதற்கு முன்னதாக, சுய கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது. பொதுமக்கள், https://se.census.gov.in என்ற இணையதள முகவரியில், தங்களின் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். இந்த இணையதளத்தில், 16 மொழிகளில் பதிவேற்றம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்தப் பணிகள், வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறும்.
சுய கணக்கெடுப்பு பதிவேற்றத்திற்குப் பிறகு, ஒரு தனித்துவமான அடையாள எண் உருவாக்கப்படும். இதை பொதுமக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பின் போது, வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, சுகாதாரம், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள் வசதி, வாகனங்கள், உணவு முறை உள்ளிட்ட மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும்.
இந்தக் கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள், தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் திட்டமிடலுக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும். வீடு விபர பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகளுக்குப் பிறகு, 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், நாடு முழுவதும் ஒரே கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும். அதனுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகளும் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் கேட்கப்படும் கேள்விகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

