பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு – என்ஐஏ விசாரணை தீவிரம்

பெங்களூரு: பிரதமர் மோடி நேற்று கர்நாடகா சென்றிருந்த நிலையில், அவர் செல்லும் பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கலந்து கொள்வதற்காக கர்நாடகா வந்திருந்தார் பிரதமர் மோடி. அப்போது, வாகன அணிவகுப்பு பெங்களூரு புறநகர் பகுதியான நைஸ் ரோடு (NICE Road) சந்திப்பு வழியாகச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. முன்னதாக, காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு இரண்டு ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், அந்த ஜெலட்டின் குச்சிகளைப் பத்திரமாக மீட்டனர்.

இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, டெல்லியிலிருந்து தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் பெங்களூரு விரைந்துள்ளனர். அவர்கள் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தற்போது வரை இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மர்ம நபர்களின் நடமாட்டம் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் செல்லும் பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பாதுகாப்பு குறைபாடா அல்லது சதி வேலையா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version