செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியிடப்படாது எனத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை, அவை வெளியான 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்பதே திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை தயாரிப்பாளர்கள் ஏற்க வேண்டும் என்றும், அதற்கான உத்தரவாதக் கடிதத்தை வழங்கினால் மட்டுமே படங்களை திரையரங்குகளில் வெளியிட அனுமதிப்போம் என்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக முடிவெடுத்திருந்தன.
இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தினருடன் கலந்தாலோசிக்காமல் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எடுத்த இந்த முடிவை கண்டிக்கும் வகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன. வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்றும், தற்போது இடைக்கால படப்பிடிப்பில் இருக்கும் படங்களின் பணிகளையும் நிறுத்தி வைக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 250க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்று லாபம் ஈட்டுகின்றன. பெரும்பான்மையான படங்கள் தோல்வியை சந்திப்பதால், தயாரிப்பாளர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், தயாரிப்பாளர்கள் தங்களது முதலீட்டை திரும்பப் பெறுவதற்காக ஓடிடி தளங்களையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த சூழலில், திரைப்படங்களை வெளியிட்ட 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஏற்க மறுத்து வருகின்றன. இந்த இழுபறி நிலை காரணமாகவே, புதிய படங்களின் வெளியீட்டை நிறுத்தி வைக்கும் முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த அறிவிப்பால், தமிழ் சினிமா துறையில் புதிய படங்களின் வெளியீடு பாதிக்கப்படுவதுடன், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர்களின் இந்த முடிவு, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ் சினிமா எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

