காவிரி டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 10 லட்சம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். உடனடியாக நெல் கொள்முதல் பணிகளைத் தொடங்க தவெக அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன. விவசாயிகள் மிகுந்த சிரமத்துடன் அறுவடை செய்த நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய அரசு உரிய ஏற்பாடுகளை செய்யாதது மிகவும் கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு போன்ற பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, குடவாசல், நன்னிலம், வலங்கைமான் போன்ற பகுதிகளிலும் உள்ள கொள்முதல் நிலையங்களில் இந்த அவல நிலை நிலவுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல சரக்குந்துகள் வராததே, புதிதாக வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாததற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி ஒரு சங்கிலித் தொடர் போல சீராக நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் தற்போது அறுபட்டுள்ளது. இதனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசின் அலட்சியமும், முறையான திட்டமிடல் இல்லாததுமே முக்கிய காரணங்கள்.
காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை அறிவித்துள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் உடனடியாக கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாவிட்டால், அவை முழுமையாக மழையால் பாதிக்கப்பட்டு வீணாகிவிடும் அபாயம் உள்ளது.
வறட்சி காரணமாக குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. இத்தகைய சூழலில், விவசாயிகள் மிகுந்த சிரமத்துடன் விளைவித்த நெல் மூட்டைகள் வீணாவதை அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
எனவே, கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

