தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்குத் தேவையான நிலங்களை அடையாளம் காணுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டையும் விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இது குறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், 'கல்வி என்பது அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் வருவதால், அதற்கான கொள்கைகளை வகுக்கவும், சட்டங்களை இயற்றவும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு இயற்றிய 'தமிழ் கற்றல் சட்டத்தின்' கீழ், மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்கியுள்ளது. எனவே, மாநில அரசின் சொந்தச் சட்டங்களுக்கு முரணாக இருக்கும் மத்திய அரசின் நிர்வாகக் கொள்கைகளைச் செயல்படுத்த இயலாது. நவோதயா பள்ளிகளை அமைக்க வேண்டும் என்றோ, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றோ மத்திய அரசுக்கு வற்புறுத்தும் அதிகாரம் இல்லை. நிலக் கொள்கை, நில மேலாண்மை மற்றும் உரிமை மாற்றம் தொடர்பான விவகாரங்கள் முற்றிலும் மாநில அரசின் விருப்ப உரிமைக்கு உட்பட்டவை. எனவே, ஒரு மாநில அரசிடம் இருந்து நிலத்தைப் பெறவோ அல்லது நிலத்தை ஒதுக்கீடு செய்யவோ நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆகையால், மாவட்டம்தோறும் நவோதயா பள்ளிகளுக்கு நிலத்தை அடையாளம் காணும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும்' என்று தமிழக அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அரசு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 5,109.90 கோடி ரூபாய் நிதியை இன்னும் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த நிதி விடுவிக்கப்பட்டால், மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தி, மாணவர்கள் கூடுதல் பயனடைய வழிவகை செய்ய முடியும் என்றும் தமிழக அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், நவோதயா பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

