யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, உலகையே வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யுபிஐ (UPI) மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகள், அன்று முதல் இன்று வரை முற்றிலும் இலவசமாகவே இருந்து வருகின்றன. எதிர்காலத்திலும், சாமானிய மக்களிடமிருந்தோ அல்லது சிறு வணிகர்களிடமிருந்தோ ஒரு பைசா கூட கட்டணமாக வசூலிக்கப்படாது என்பதே உண்மை.
உலகின் மிகப்பெரிய பணப்பரிவர்த்தனை அமைப்பான யுபிஐ-யின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே, தற்போது நிதி ஆதாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இது, வணிகர்களுக்கும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு வணிக ஒப்பந்தம் மட்டுமே. இது சாமானிய மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனமான உண்மை.
வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகுதான், இது குறித்து நிபுணர் குழு உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு இறுதி முடிவெடுக்கும். எனவே, எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் லாபத்திற்காகப் பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

