கரூரில் நடைபெற்ற ஒரு விழாவில், பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்து கடவுள்களை வேண்டுமென்றே தவிர்த்தது கண்டிக்கத்தக்கது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
"Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறி, பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்து கடவுள்களை வேண்டுமென்றே தவிர்த்தது, உங்களைப் போன்ற இந்து மத வெறுப்பாளர்கள் இருக்கும் வரை சமூகத்தில் மத நல்லிணக்கம் என்பது மருந்திற்கும் கிடைக்காது. "அனைவருக்குமான ஆட்சி" என்று கூறிக்கொண்டு, இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையைக் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த ஆண்டு உங்கள் தலைவரைப் பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அப்போது நேரில் வந்து ஆறுதல் கூறக் கூட தைரியமின்றி ஓடி ஒளிந்த நீங்கள், உங்கள் தலைவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துதான் நேற்று கரூருக்கு வழி கண்டுபிடித்து வந்தீர்கள். வந்த வேலையை விட்டுவிட்டு, ஆறுதல் கூறும் நிகழ்வில் கூட இந்துக்களுக்கு எதிராக வன்ம அரசியலைத் தூண்டும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது.
தமிழகம் என்பது அடிப்படையில் ஒரு ஆன்மீக பூமி. நாம் காலங்காலமாகப் போற்றிப் பாதுகாத்து வரும் நமது தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்து கடவுள்களையே போற்றுகின்றன. ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, 'வாக்கு வங்கி'யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் தவெக அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்!" என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

