கரூர் மாவட்டத்தில் இனாம் சட்டத்தின் கீழ் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்ட 3,085 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவகாரத்தில், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், 3,085 ஏக்கர் நிலங்களுக்கு பத்திரப்பதிவு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்கி அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், ரமேஷ் என்பவர் உண்மைகளை மறைத்து, இனாம் நிலங்களை கோவில் நிலங்கள் என்றும், அவை ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ளவை என்றும் தவறான தகவல்களை பரப்பி, அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரை வார்த்துவிட்டதாக ஒரு பதிவை செய்துள்ளார்.
இந்த தவறான தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதை வழிமொழிந்து அறிக்கை வெளியிட்டது, தமிழ்நாட்டில் இனாம் நிலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சுமார் 30 லட்சம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நயினார் நாகேந்திரன் தனது தவறான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இனாம் நில விவசாயிகள் பொதுமக்களின் நில உரிமைக்கு ஆதரவாக நிற்க வேண்டும். ஒருவேளை, இனாம் நிலங்களை கோவில் நிலங்கள் என்று நயினார் நாகேந்திரன் நிரூபித்தால், அவருக்கு ரூ.25 ஆயிரம் கோடி பரிசு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

