தமிழகத்தின் மின்னணு உற்பத்தித் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிவகங்கை மாவட்டம் மணலூரிலும், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்திலும் புதிய மின்னணு உற்பத்தி தொகுப்புகள் (EMCs) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக சுமார் ரூ. 1,012 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முக்கிய முடிவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
புதிய மின்னணு உற்பத்தி தொகுப்புகள் அமைப்பதன் மூலம், தமிழகம் இந்தியாவின் முக்கிய மின்னணு உற்பத்தி மையங்களில் ஒன்றாக மேலும் வலுப்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் இந்தியாவின் மின்னணு பொருட்கள் உற்பத்தித் திட்டங்கள், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்றும், இதன் மூலம் பாரதம் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை எட்டும் என்றும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், 'மேக் இன் இந்தியா' மற்றும் 'டிஜிட்டல் இந்தியா' போன்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் இந்த முன்னெடுப்புகள், தமிழகத்தில் அமையப் பெறுவது தனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

