மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி, தனது செயல்திறன் இயக்குநராக ஜுபின் பருச்சாவை நியமித்துள்ளது. இந்த நியமனம், அணியின் ஒட்டுமொத்த கட்டமைப்பிலும் செயல்திறனிலும் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் வீரரான ஜுபின் பருச்சா, மும்பை மற்றும் சர்ரே அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டவர். இவர் இதற்கு முன்னர் 2018 முதல் 2025-26 சீசன் வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். கடந்த ஆறு ஐபிஎல் சீசன்களாக கோப்பையை வெல்லாத மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, இந்த மாற்றம் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது.
ஜுபின் பருச்சாவின் நியமனத்தின் மூலம், நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கிரிக்கெட் செயல்பாடுகளை நிர்வகிக்கும் ஒரு புதிய வழிமுறை மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடங்கப்படும். மேலும், யுவராஜ் சிங் முதல் வைபவ் சூர்யவன்ஷி வரையிலான பல்வேறு வீரர்களின் திறமைகளை மேம்படுத்திய அவரது அனுபவமும் அணிக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் செயல்திறன் இயக்குநராக இணையும் ஜுபின் பருச்சா, அணியின் அனைத்து செயல்திறன் பிரிவுகளிலும் உள்ள தலைமைத்துவக் குழுவுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவார். அணியின் தற்போதைய உதவிப் பணியாளர்களுடன் இணைந்து, வீரர்களின் மேம்பாட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தனித்துவமான அணுகுமுறையை அவர் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார். 'புளூ மற்றும் கோல்டு குடும்பத்திற்கு ஜுபினை வரவேற்கிறோம்!' என்று மும்பை இந்தியன்ஸ் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வலது கை தொடக்க ஆட்டக்காரரான ஜுபின் பருச்சா, தனது 18வது வயதில் இங்கிலாந்தின் ரைகேட் பிரையரி கிரிக்கெட் கிளப்பில் வெளிநாட்டு வீரராக தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் மும்பை அணிக்காக (முன்பு பம்பாய்) 17 முதல்தர போட்டிகள் மற்றும் 11 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு, பருச்சா மும்பையில் வேர்ல்டு கிரிக்கெட் அகாடமியை நிறுவினார். இங்கு பல டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். யுவராஜ் சிங்கின் ஃபுட்வொர்க் நுணுக்கங்களை மேம்படுத்துவதில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்ப முயற்சிகளிலும் பங்காற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை, பருச்சா 2008 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராகப் பொறுப்பேற்று 2015 வரை பணியாற்றினார். மேலும் 2012 இல் அந்த அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) அணியில் தொழில்நுட்ப இயக்குநராகப் பணியாற்றினார். அதன்பின் 2018 இல் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பி, கிரிக்கெட் செயல்பாட்டுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தபோது, இந்தியா முழுவதும் செயல்படும் அவர்களது அகாடமிகளை நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். இந்த அகாடமிகளில் தான் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் சீசன் இல்லாத காலங்களில் பயிற்சி பெற்றனர். நடப்பாண்டு நடக்கவிருக்கும் மினி ஏலத்திற்கு முன்னதாக, ஐபிஎல் 2027 சீசனுக்காக ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற மூத்த வீரர்கள் தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

