இயல்பாக சிரித்ததை திரிப்பது வருத்தம் – அமைச்சர் கீர்த்தனா

தொழில்துறை தொடர்பான கூட்டத்திற்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, தான் இயல்பாக சிரித்ததை தவறாகப் புரிந்துகொண்டு, அரசியல் நோக்கத்துடன் திரித்து பரப்பப்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், 'கேள்வி-பதில்கள் முடிந்த தருணத்தில் நான் இயல்பாக சிரித்தேன். அது எந்தக் கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பல்ல. ஆனால் அந்த உடல் மொழியை தவறாகப் புரிந்து கொண்டு, அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தம் அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரச் சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 250க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

ஒரு குழந்தைக்கான நீதியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் தான் இந்த அரசின் முதல் முன்னுரிமை என அமைச்சர் வலியுறுத்தினார். இத்தகைய உணர்வுப்பூர்வமான சூழ்நிலையிலும் அடிப்படையற்ற விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற ட்ரோலிங் நடைபெறுவது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சிப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் உண்மைகளை திரித்து, ஒருவரின் தனிப்பட்ட தருணங்களையே அரசியல் ஆயுதமாக மாற்றுவது சமூகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. தமிழ்நாடு அரசு மக்கள் பாதுகாப்பிலும், நீதியிலும் எந்த சமரசமும் செய்யாது என்றும் அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதனிடையே, 'மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா?' என கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version