வீடியோ எடுத்தது ஊடகங்கள்: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்

சிவகாசி அரசுப் பள்ளியில் காணப்பட்ட அவலநிலை குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, "அந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை, ஊடகங்கள்தான் பதிவு செய்தன" எனத் தெரிவித்துள்ளார். அரசியல் என்பது உண்மைகளை மறைப்பதல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்!" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். கழிப்பறை வசதி, உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் இல்லாமலும், பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டிக்கிடந்த நிலையிலும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது? என அவர் வினவினார்.

இன்றைய நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள். நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், கடமையுமாகும் என்றும் அவர் விளக்கினார்.

மேலும், தான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள் என்றும், இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே தன்னைப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தானே நேரடியாக அனுபவித்திருப்பதாகவும், அதனால்தான் இந்த மாணவர்களின் எதிர்காலம் தனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி! என அவர் சுட்டிக்காட்டினார்.

தன் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என அமைச்சர் கீர்த்தனா உறுதியளித்தார். அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான் என அவர் தனது விளக்கத்தை நிறைவு செய்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version