தமிழகவெற்றி கழகத்தின் (த.வெ.க) 15 சட்டமன்ற உறுப்பினர்களிடம், 'மேகாலயா ப்ராஜெக்ட்' என்ற பெயரில் பெரும் தொகைக்கு பேரம் பேசிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
த.வெ.க-வைச் சேர்ந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் மற்றும் ஐபிடிஎஸ் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு மீது புகார் அளித்துள்ளார். சட்டமன்ற வாக்கெடுப்பில் த.வெ.க-வின் நிலைப்பாட்டை மீறி, குறிப்பிட்டபடி வாக்களிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் ரூபாய் 35 கோடி லஞ்சமாக வழங்குவதாகவும் திருநாவுக்கரசு மற்றும் சில நபர்கள் தன்னிடம் கூறியதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், டி1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, திருநாவுக்கரசு மற்றும் சில நபர்கள் கூட்டுச்சதி செய்து, 'மேகாலயா பிராஜக்ட்' என்ற பெயரில் சுமார் 15 த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சியின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட முயன்றது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் திரு. விஜயன் என்பவரும் தொடர்புடையவர் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசுக்கு, ஆட்சேபகரமான குறுஞ்செய்திகளை அனுப்பி, குற்றச்சதியில் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரிக்க, பத்திரிக்கை ஆசிரியர் திரு. விஜயனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
நேற்று (15.07.2026) மற்றும் இன்று (16.07.2026) அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. மேலும், அவரது செல்போனை சைபர் பகுப்பாய்விற்கு உட்படுத்தி, வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இந்த 'மேகாலயா ப்ராஜெக்ட்' விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் ஆட்சியின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த பேரம்பேசுதல் சம்பவம், சட்டமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
காவல்துறையின் தொடர் விசாரணையின் மூலம் இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியான இதுபோன்ற செயல்கள் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகின்றன.

