காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை? ஆணவக்கொலையா? தந்தையிடம் போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கீற்று கொட்டகையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இது தொடர்பாக போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் பார்த்திபன் (19) மற்றும் சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு முடித்த 16 வயது சிறுமி திவ்யதர்ஷினி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததை அடுத்து, இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பார்த்திபனின் பெற்றோர், பெண் வீட்டார் மீது பொறையார் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 3 மணியளவில் சாத்தங்குடி பகுதியில் உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில் பார்த்திபனும், திவ்யதர்ஷினியும் தனித்தனியாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். இன்று காலை இந்தச் சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் என 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் அடித்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டது போல் உள்ளதாகவும், இது ஆணவக்கொலையாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தங்களது மகனைப் பெண் வீட்டாரே அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகப் பார்த்திபனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version