நெஞ்சுவலி லோகோ பைலட்: சமயோசிதத்தால் பயணிகள் காப்பு!

ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்டுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சமயோசிதமாக ரயிலை ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சென்னை சென்ட்ரல் மற்றும் ஜோலார்பேட்டை இடையே தினந்தோறும் இயக்கப்படும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் (16089), நேற்று மாலை சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஆவடி ரயில் நிலையத்தை அடைந்தபோது, ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலையையும், பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, அவர் உடனடியாக ரயிலை ஆவடி ரயில் நிலையத்திலேயே நிறுத்தியுள்ளார். இதுகுறித்து உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி அளித்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வழக்கமாகச் செல்லும் ரயில் திடீரென ஆவடி ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் நின்றதால், பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. முதலில் ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாகக் கருதப்பட்டது. பின்னர், லோகோ பைலட்டுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்தது.

ரயில்வே நிர்வாகம் உடனடியாக மாற்று லோகோ பைலட்டை ஏற்பாடு செய்தது. இருப்பினும், அவர் ஆவடி ரயில் நிலையம் வந்து சேர சுமார் 45 நிமிடங்கள் ஆனது. மாற்று லோகோ பைலட் வந்த பிறகு, ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் முக்கால் மணி நேர தாமதத்திற்குப் பிறகு ஜோலார்பேட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

இந்த திடீர் தாமதத்தால், மாலை நேரத்தில் சொந்த ஊர்களுக்குப் பயணித்த அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலர் ஆவடி ரயில் நிலையத்தில் காத்திருக்க நேரிட்டது. இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். லோகோ பைலட்டின் சமயோசித செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version