கோவை வானிலை நிபுணர் சந்தோஷ் க்ரிஷ், தென்மேற்கு பருவமழை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது பின்தொடர்பவர்களில் சிலர், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போகும் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு, தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை நடப்பு ஆண்டை விட மோசமான ஒரு ஆண்டு இருந்ததில்லை என்று சந்தோஷ் க்ரிஷ் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் அதிக மழைப்பொழிவு இருந்த ஆண்டுகளைப் பற்றி முதன்முதலில் பதிவிட்டவர் தான்தான் என்றும், அப்போதே எதிர்காலத்தில் வறட்சி ஏற்படும் என்றும் எச்சரித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பூமி உருவான காலத்திலிருந்தே வறட்சியும் வெள்ளமும் ஒரு சுழற்சியாக இருந்து வருவதாகவும், ஆனால் தொழில்மயமாக்கல் காரணமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இந்த நிகழ்வுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார். மேலும், அதிகப்படியான ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, தென்னை அல்லது பாக்கு போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை அதிகரிப்பது போன்ற காரணங்களால் நாம் திகைத்து நிற்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு கோடையில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்றும், ஏனெனில் இந்த ஆண்டு நிச்சயமாக ஒரு 'சூப்பர் எல் நினோ' ஆண்டாக இருக்கும் என்றும் சந்தோஷ் க்ரிஷ் எச்சரித்துள்ளார். இதன் பக்கவிளைவுகள் அடுத்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வரை கூட நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உதவி செய்து தனது பங்களிப்பை வழங்கி வருவதாகவும், வானிலையில் சாதகமற்ற சூழல் இருக்கும்போது, வானிலை கணிப்புக்கு உண்மையாக இருந்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பது தனது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு அதிக பின்தொடர்பவர்களைப் பெறுவதற்காக, இன்னும் கனமழை பெய்யும் என்ற தவறான கருத்துக்களைக் கூறி மக்களை ஏமாற்றும் பலர் இருப்பதாகவும், ஆனால் சுயநலத்திற்காக தனது பின்தொடர்பவர்களை ஏமாற்றும் ஒருவராக இருக்க மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நண்பர்களே, அடுத்த கனமழை எப்போது வரும் என்ற பின்தொடர்பவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலேயே கடந்த சில மாதங்கள் மிகவும் பரபரப்பாகவும் சோர்வாகவும் கழிந்துவிட்டன. எனது மன அமைதிக்காக இதிலிருந்து ஒரு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் சாதகமான சூழல் ஏதேனும் ஏற்படும்போது நான் நிச்சயமாக இங்கு பதிவிடுவேன். அதுவரை எங்களிடமிருந்து தினசரி வானிலை அறிக்கையை எதிர்பார்க்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

