கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை என்றும், தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அனுப்பிய கடிதம் தொடர்பாக வெளியான செய்திகள் தவறான புரிதலை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி மத்திய அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியானது. இதை சிலர் இரு நகரங்களுக்கும் எதிரான தீர்ப்பாக சித்தரிக்க முயல்வதாகவும், ஆனால் அது முற்றிலும் தவறான புரிதல் என்றும் வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2025 நவம்பரில், விரிவான திட்ட அறிக்கைகளை முழுமையான ஆய்வுக்குப் பிறகு மத்திய அரசு திருப்பி அனுப்பியபோது, மக்கள் தொகை, தினசரி பயணிகளின் பயன்பாடு, உயர்மட்ட நிலையங்கள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் போன்ற முக்கியமான குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். மீண்டும் கடந்த மே மாதத்தில் மாநில அரசு திருத்தப்பட்ட திட்டங்களைச் சமர்ப்பித்தபோதும், ஏற்கனவே கூறப்பட்ட பிரச்சினைகள் எதுவும் சரிசெய்யப்படவில்லை என்பதை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தனது பதில் கடிதத்தில் தெளிவுபடுத்தியதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சராசரி பயண தூரம் சுமார் 15 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேல் இருக்கும் நகரங்களில்தான் இத்தகைய பெரிய அளவிலான மெட்ரோ முதலீடுகள் நியாயப்படுத்தப்பட முடியும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதன் அடிப்படையில், கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் பேருந்து மையப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து அமைப்புகளை வலுப்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளதாகவும், தற்போதைய தரவுகளின் அடிப்படையில் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியவில்லை என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு என்றும் அவர் விளக்கினார்.
இந்தச் சூழலில், போபால், இந்தூர், பாட்னா, மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களில் மக்கள் தொகை தரவுகளைச் சரியாகப் பயன்படுத்தி, மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதலைப் பெற்றன. ஆனால் கோவைக்கான சரியான திட்டமிடலை வெளிப்படுத்தும் வகையில் முறையான அறிக்கை தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். நமது சாலைகளின் உண்மையான அகலத்தைக் கொண்டு பாதை அமைப்புகள் வடிவமைக்கப்படவில்லை என்றும், எந்தப் பொறியாளரும் ஆய்வுக்குழுவின் முன் நியாயப்படுத்த முடியாத யூகங்களின் அடிப்படையில்தான் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்திலும் இந்த அறிக்கைகளில் குறிப்பிட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பது பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நிர்ணயிக்கப்பட்டுள்ள மக்கள்தொகை, பயணிகள் பயன்பாடு, பொறியியல் சாத்தியக்கூறு மற்றும் பொருளாதார சாத்தியக்கூறு ஆகிய அளவுகோல்களை பூர்த்தி செய்யும் எந்தப் பொதுப் போக்குவரத்து திட்டத்திற்கும் மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, முந்தைய விரிவான திட்ட அறிக்கைகளில் ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்து, விரிவான போக்குவரத்துத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூர் திட்டமிடல் பகுதி மற்றும் நகரக் குழுமம் மக்கள் தொகைத் தரவுகளின் அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

