கேரள முதல்வர் செயலாளர் நியமனம் சர்ச்சை: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. புதிய முதல்வராக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில், சமீபத்திய தேர்தலை கண்காணித்த தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு.கெல்கர், முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலை நடத்திய அதிகாரியை நேரடியாக முதல்வர் அலுவலகத்திற்கு மாற்றுவது, தேர்தல் நடுநிலைமை குறித்த மக்களின் பார்வையை சீர்குலைக்கும் என எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன. இந்த இடமாற்றம் கெல்கரின் சேவைகளுக்கான வெகுமதி என்றும், தேர்தல் நம்பகத்தன்மை குறித்தும் மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

கடந்த மேற்கு வங்க தேர்தல் முடிந்த பிறகு, அங்கு தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய மனோஜ் அகர்வால் மாநில தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தனர். தற்போது காங்கிரஸ் பயன்படுத்தும் அதே வாதங்களை சுட்டிக்காட்டி, அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை பாஜக விமர்சித்துள்ளது.

இந்நிலையில், கெல்கரின் நியமனத்தில் முறைகேடு எதுவும் இல்லை என்று முதல்வர் சதீசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஒரு தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தலுக்குப் பிறகு ஓய்வு பெறுவதில்லை. அவருக்கு புதிய பதவி வழங்கப்பட வேண்டும். முன்னாள் நிதி அமைச்சர், முந்தைய முதல்வரின் செயலாளராக கெல்கர் பணியாற்றியுள்ளார். எனது குழுவில் ஒரு அனுபவம் வாய்ந்த அதிகாரி இடம்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்று தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version