1.2 கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்: காவேரி கூக்குரல் இயக்கம்

சத்குருவின் 'மண் காப்போம் – காவேரி கூக்குரல்' இயக்கத்தின் சார்பில், இந்தாண்டு 1.2 கோடி மரக்கன்றுகள் நடும் மாபெரும் பணி இன்று (05/06/2026) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுவையில் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. இதுவரை இந்த இயக்கம் மூலம் 13.4 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற தொடக்க விழாவில், சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சைதை எம்எல்ஏ அருள் பிரகாசம், திரைப்பட தயாரிப்பாளர் ஷோபா சந்திரசேகர், கல்லூரித் தலைவர் தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு பணிகளைத் துவக்கி வைத்தனர். புதுவையில் முதல்வர் ரங்கசாமி மரம் நடும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், 'நோயற்ற வாழ்விற்கு சுற்றுச்சூழல் அவசியம் என்பதை ஈஷா தனது செயல்பாடுகள் மூலம் உணர்த்துகிறது. காவேரி கூக்குரல் போன்ற இயக்கங்கள் மூலம் மரவளர்ப்பை முன்னெடுப்பது பொருத்தமானது. வனவளம் பெருகினால் மழை அதிகமாகி விவசாய உற்பத்தி பெருகும். முதலமைச்சர், வனவளத்தை அதிகரிக்கவும், நீர்நிலைகளில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும், காற்று மாசுபடுவதைத் தவிர்க்கவும், கூவம் நதியை மீட்டெடுக்கவும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகிறார்' எனத் தெரிவித்தார்.

திரைப்பட தயாரிப்பாளர் ஷோபா சந்திரசேகர் பேசுகையில், 'மண்ணையும் மரத்தையும் போல பிறருக்குப் பயனுள்ளதாக வாழ்வதே சிறப்பு. மரங்கள் வானத்தை நோக்கி பூமி எழுதிய கவிதைகள். மண் காப்போம் இயக்கத்தை உருவாக்கிய சத்குருவிற்கு நன்றி. இந்த இயக்கம் இதுவரை 13.4 கோடி மரங்களை விவசாய நிலங்களில் நட்டு, 2.6 லட்சம் விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்றியுள்ளது. கடலூரில் உள்ள காவேரி கூக்குரல் நாற்றுப்பண்ணை ஆசியாவின் மிகப்பெரியதும், பெண்களால் நிர்வகிக்கப்படுவதுமான பண்ணையாகும்' என்றார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த விழாக்களில், 1,00,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, 317 ஏக்கர் பரப்பளவில் மரம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'பருவநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக இயற்கையிலிருந்து உத்வேகம் பெறுவோம்' என்ற ஐநா-வின் கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காவேரி நதியை புத்துயிர் பெறச் செய்வதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் இந்த இயக்கம் செயல்படுகிறது.

மரம் சார்ந்த விவசாயத்தில், பயிர்களுடன் பொருளாதார மதிப்புள்ள மரங்களும் வளர்க்கப்படுகின்றன. இந்த விவசாய முறையால் மண் வளம், நதிநீர் வளம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் வருமானம் ஒரே நேரத்தில் மேம்படுவதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் வருமானத்தை 3 முதல் 5 மடங்கு வரை அதிகரிக்க முடியும். ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் தேக்கு, செம்மரம், சந்தனம் போன்ற மதிப்புமிக்க மரக்கன்றுகளும், மிளகு, அவகாடோ போன்ற பயிர்களின் கன்றுகளும் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

கடலூர் நாற்றுப்பண்ணையில் ஆண்டுதோறும் 85 லட்சம் மரக்கன்றுகளும், திருவண்ணாமலை நாற்றுப்பண்ணையில் 15 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இரு பண்ணைகளும் இணைந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மரக்கன்றுகளை வழங்கி, மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. மரக்கன்று நடவு மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் காவேரி கூக்குரல் இயக்கம் இலவசமாக வழங்கி வருகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version