சச்சின் போல ஆட முடியுமா? இளம் வீரருக்கு கபில் தேவ் சவால்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகவுள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். வைபவ் ஒரு சிறந்த திறமையாளர் என்றாலும், அவரது உண்மையான திறனை ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின்னரே மதிப்பிட முடியும் என அவர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வைபவ் தயாராகி வரும் நிலையில், அவரை சச்சினுடன் ஒப்பிடுவது குறித்து கபில் தேவ் கூறுகையில், 'வைபவ் மிகவும் இளையவர். அவர் ஒரு தனித்துவமான திறமையாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 16 வயதில் அவர் சச்சின் டெண்டுல்கரைப் போலத் தெரிகிறார். ஆனால், சச்சினைப் போல அவரால் இத்தனை ஆண்டுகள் நீண்ட காலம் விளையாட முடியுமா? அவர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அவருக்கு இப்போது 20 முதல் 22 வயது ஆகும்போது தான், நாம் அவரைப் பற்றி முழுமையாக மதிப்பிட முடியும்' என சவால் விடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக வைபவ் சூர்யவன்ஷி உச்சகட்ட ஃபார்மில் உள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 175 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு கோப்பை வெல்ல உதவினார். ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 776 ரன்கள் குவித்து, ஆரஞ்சு தொப்பி வென்ற மிக இளைய வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார். மேலும், ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையையும் அவர் முறியடித்தார்.

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஏ தொடரின் இறுதிப்போட்டியில் 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசி தனது அதிரடி ஆட்டத்தை நிரூபித்த வைபவ், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை நடைபெற உள்ள அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் களம் இறங்க வாய்ப்புள்ளது. இது குறித்துப் பேசிய கபில் தேவ், வைபவ்-வுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version