திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், வெறும் 9 லட்ச ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பழனி ஆயக்குடி பகுதியில் நடைபெற்ற இந்த பத்திரப்பதிவு மோசடி தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, பழனி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான இந்த நிலத்தை, ஏற்கனவே பத்திரப்பதிவு முறைகேடுகளில் சிக்கிய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தான் பதிவு செய்துள்ளார் என்பது மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.
இது குறித்து திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், பழனி பத்திரப் பதிவாளருக்கு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். இருந்தபோதிலும், கடந்த மாதம் இந்த நிலம் ஒரு தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பத்திரப்பதிவுத் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், போலியான ஆவணங்களைத் தயாரித்து நிலத்தைப் பதிவு செய்ய முடியும் என்றால், அது பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்று தொடர்ந்து கோவில் நிலங்கள் தனிநபர்களின் பெயரில் மோசடி செய்யப்பட்டு அபகரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததும், சாமானிய மக்கள் எளிதில் அறிய முடியாத வகையில் சில நடைமுறைகள் பின்பற்றப்படுவதும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழக அரசு உடனடியாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில் நிலங்களையும் ஆய்வு செய்ய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.
இந்த ஆய்வின் மூலம் இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அந்த நிலங்களை மீட்க வேண்டும் என்றும், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுவதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கோவில் மற்றும் மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

