வெற்றி வரும், தோல்வி வரும், அதோடு ஜால்ராவும் வரும். இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வளர்ச்சிப் பாதையில் பயணித்தவர்கள்தான் பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்பி தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்திய சினிமா உலகிலேயே அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் நாடு இந்தியா என்றும், அரசுகளின் உதவியுடன் சினிமாவை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தியாவின் மிகப்பெரிய விருதை ஒரு திரைப்படத் தொழிலாளி பெறும் நாளை நேரில் காண வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், 'வெற்றி வரும், தோல்வி வரும்; அதோடு ஜால்ராவும் வரும். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு வளர்ச்சிப் பாதையில் பயணித்தவர்கள்தான் பாரதிராஜா, பாக்யராஜ்' என்று குறிப்பிட்டார்.
இயக்குநர் பாரதிராஜாவைப் பற்றிப் பேசும்போது, 'பாரதிராஜா தனி மனிதர் அல்ல; சினிமாவில் ஒரு பெரிய குடும்பம். அவரை வெறும் இயக்குநர் என்று எப்படி சொல்வது? அவர் என் குடும்பம். பலமுறை என் வீட்டில் வந்து படுத்து தூங்கியிருக்கிறார்' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகிய இருவருடனும் பணியாற்றியவன் என்பதில் பெருமை கொள்வதாகவும், இருவரும் தமிழ் சினிமாவின் அடையாளங்கள் என்றும், தமிழ் சினிமாவில் ஆழமாக வேரூன்றியவர்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பாரதிராஜா தனிப்பட்ட முறையில் தனக்கு மிகப்பெரிய ஊக்கம் அளித்தவர் என்றும், தோல்விகளுக்கு அஞ்சாதவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். இயக்குநர் கே.பாலசந்தர், 'பாரதிராஜா போல ஒரு கலைஞன் இல்லை' என்று கூறுவார் என்றும், அப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் பயணித்தது தனக்கு பெருமை என்றும் கமல்ஹாசன் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

