நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியான தவெக-வை மட்டும் புகழ்ந்து பேசும் படமோ அல்லது வழக்கமான பொழுதுபோக்கு படமோ அல்ல என்று படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் விளக்கமளித்துள்ளார்.
'ஜனநாயகன்' திரைப்படம் குறித்து இயக்குனர் ஹெச்.வினோத் மேலும் கூறுகையில், "இந்த திரைப்படம் கதையின் வழியாக சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய, சிந்திக்கத் தூண்டும் அரசியல் கருத்துக்களை முன்வைக்கிறது. இந்தக் கருத்துக்கள் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கும் என நாங்கள் நம்புகிறோம். விஜய் சாரை அவரது ரசிகர்கள் பெரிய திரையில் கடைசியாக காண வேண்டும் என்ற ஆவலுடன் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
'ஜனநாயகன்' ஒரு அறிவியல் புனைகதை (சயின்ஸ் ஃபிக்ஷன்) திரைப்படம் அல்ல. மாறாக, இது நவீன போர் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பாகும். நவீன போர் தொழில்நுட்பங்களின் பின்புலத்தில்தான் 'ஜனநாயகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் மற்றும் அஜித் ஆகிய இரு நடிகர்களும் தங்களது உயர்ந்த நிலையை அடைய காரணம் அவர்களது மனிதாபிமானமே. ஒரு திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்படும்போது, அதனால் பாதிக்கப்படும் குடும்பங்களின் நிலை குறித்து அவர்கள் சிந்திப்பார்கள். 'கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகிவிடும்' என்று அவர்கள் தொலைபேசியில் அளிக்கும் ஆறுதல், குடும்ப உறுப்பினர்களின் அக்கறைக்கு ஒப்பானது" என்று அவர் தெரிவித்தார்.

