வைபவ் சூர்யவன்ஷிக்கு பயந்து RR அணியை விட்டு வெளியேறுங்கள்: ஜெய்ஸ்வாலுக்கு ராயுடு அறிவுரை

2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபார வளர்ச்சி காரணமாக, சக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடனடியாக அணியை விட்டு வெளியேற வேண்டும் என முன்னாள் வீரர் அம்பதி ராயுடு அதிரடியாக அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 680 ரன்களுக்கு மேல் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆனால், அதே அணியில் விளையாடும் அனுபவமிக்க ஜெய்ஸ்வால் 426 ரன்கள் மட்டுமே எடுத்து, வைபவ்வின் அதிரடிக்கு மத்தியில் அவரது திறமை மறைக்கப்பட்டுவிட்டதாக ராயுடு குறிப்பிட்டுள்ளார். இந்திய அணிக்காக 55 போட்டிகளில் விளையாடிய ஒரு வீரருக்கு, சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத ஒரு சிறுவனால் அங்கீகாரம் கிடைக்காமல் போவது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அம்பதி ராயுடு மேலும் கூறுகையில், 'ஜெய்ஸ்வால் தனது அணியை மாற்ற வேண்டிய நேரம் இது. அவர் ஒரு தனித்துவமான நட்சத்திரம். ஒவ்வொரு முறையும் மற்றொரு வீரரால் தனது திறமை மறைக்கப்படுவதை அவர் அனுமதிக்கக் கூடாது. தற்போது வைபவ் உடன் ஒப்பிடப்படுவதால் ஜெய்ஸ்வால் தனது தன்னம்பிக்கையை இழந்து வருவதாக அஸ்வினும் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர் தனது திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்' என்றார்.

ஜெய்ஸ்வால் அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவதே சரியாக இருக்கும் என ராயுடு பரிந்துரைத்துள்ளார். ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பயணம் முடிவை நெருங்கி வரும் நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காகச் சிறப்பாக விளையாடிய அனுபவம் கொண்ட ஜெய்ஸ்வாலுக்கு, மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு சிறந்த மேடையாக அமையும் என ராயுடு சுட்டிக்காட்டி இருக்கிறார். 2020 முதல் ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராக விளங்கி வரும் ஜெய்ஸ்வால், தற்போது வைபவ் சூர்யவன்ஷியின் வருகையால் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயுடுவின் இந்த ஆலோசனையை ஏற்று ஜெய்ஸ்வால் அணியை மாற்றுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version