தீபாவளியில் ஐபிஎல்? பிசிசிஐயின் அதிரடி ஆலோசனை!

இந்தியாவில் கோடை காலத்தின் உச்சத்தில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை, இனிவரும் காலங்களில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு மாற்ற பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்தியாவின் கடுமையான வெப்பம் மற்றும் விளம்பரதாரர்களின் வர்த்தக நலன்கள் ஆகியவை இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

தற்போது மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும் ஐபிஎல் தொடரின் போது, இந்தியாவின் பல நகரங்களில் கடும் வெயில் நிலவுகிறது. இதனால் வீரர்கள் மைதானத்தில் அதிக உடல் சோர்வை சந்திக்கின்றனர். மேலும், 2028 முதல் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ள நிலையில், கோடை காலத்திலேயே நீண்ட நாட்கள் விளையாடுவது வீரர்களின் ஆரோக்கியத்திற்கு சவாலாக அமையும் என கருதப்படுகிறது.

இது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறுகையில், 'ஐபிஎல் தொடரின் காலத்தை மாற்றுவது குறித்து ஒளிபரப்பு நிறுவனங்களுடன் விரிவாக ஆலோசிக்க வேண்டும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடரை நடத்துவது குறித்து ஒரு வலுவான பரிந்துரை வந்துள்ளது. வர்த்தக ரீதியாகப் பார்த்தால், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய அந்த காலகட்டம் விளம்பரதாரர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாகும். அடுத்த முறை போட்டிகளுக்கான ஒளிபரப்பு ஒப்பந்தங்கள் கோரப்படும்போது, இதற்கான வாய்ப்புகள் குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் 74 போட்டிகள் நடத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் போட்டிகளின் எண்ணிக்கை 84 அல்லது 94 ஆக உயர வாய்ப்புள்ளது. போட்டிகள் அதிகரிக்கும்போது, தட்பவெப்ப நிலை வீரர்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் குளிர் காலங்களில் திட்டமிடப்படுவதால், மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடனும் இது குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், 19 ஆண்டுகளாக கோடை காலத்தில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல், இனி தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் – அக்டோபரில் நடைபெறும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version