ஸ்பாட் பிக்சிங்: இந்திய வம்சாவளி அமெரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் தடை

ஸ்பாட் பிக்சிங் புகாரில் அமெரிக்க வீரர் அகிலேஷ் ரெட்டிக்கு 8 ஆண்டுகள் தடை

2025 ஆம் ஆண்டு அபுதாபி டி10 தொடரில் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் போடுகம் அகிலேஷ் ரெட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எட்டு ஆண்டுகள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளின் மூன்று பிரிவுகளை அவர் மீறியதாக கண்டறியப்பட்டதையடுத்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஹைதராபாத்தில் வளர்ந்த அகிலேஷ் ரெட்டி, விஜய் ஹசாரே கோப்பைக்கான அணியில் இடம்பெற்றதுடன், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகவும் செயல்பட்டுள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர், சிறந்த ஆஃப்-ஸ்பின்னராகவும் அறியப்படுகிறார். அமெரிக்க அணிக்காக நான்கு சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது கடைசி டி20 சர்வதேச போட்டி 2025 இல் கனடாவுக்கு எதிராக அமைந்தது.

தற்போது 26 வயதாகும் அகிலேஷ் ரெட்டிக்கு எதிரான புகார்கள் அனைத்தும், 2025 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற அபுதாபி டி10 தொடரைச் சார்ந்தவை ஆகும். ஐசிசி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அவர் மீதான மூன்று விதிமீறல்களை உறுதி செய்துள்ளது.

இந்த 8 ஆண்டு தடை, அகிலேஷ் ரெட்டி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட 2025 நவம்பர் 21 முதல் அமலுக்கு வருகிறது. இதன் விளைவாக, அவர் 2033 நவம்பர் 21 வரை எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் அல்லது கிரிக்கெட் தொடர்பான செயல்பாடுகளிலும் பங்கேற்க முடியாது. அப்போது அவருக்கு 34 வயது ஆகியிருக்கும்.

விசாரணையின்படி, 2025 நவம்பர் 19 அன்று காலை, அஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணியின் முதல் அபுதாபி டி10 போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அணி தங்கியிருந்த ஹோட்டலில் இந்த முறைகேடான அணுகுமுறை நடந்துள்ளது. சக வீரர் ஒருவர் அளித்த சாட்சியத்தை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.

அந்த வீரரை (Player A) பந்துவீசும்போது வேண்டுமென்றே ரன்களை வழங்குமாறு அகிலேஷ் ரெட்டி கேட்டதாகவும், இந்த கோரிக்கை அணியின் நிர்வாகத்தில் உள்ள மற்றொரு நபரிடமிருந்து வந்ததாக அகிலேஷ் கூறியதாகவும் அந்த வீரர் தெரிவித்தார். இந்த கோரிக்கையை உடனடியாக நிராகரித்த அந்த வீரர், தனது ஏஜெண்டுக்கு தகவல் தெரிவித்து, 30 நிமிடங்களுக்குள் ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகார் அளிக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குள், அன்றைய போட்டிப் பட்டியலில் இருந்து வீரர் ஏ நீக்கப்பட்டதையும் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. தான் கூறியபடி செயல்பட அந்த வீரர் மறுத்துவிட்டார் என்பதை அகிலேஷ் ரெட்டி அணி நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளார் என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுவதாக தீர்ப்பாயம் கருதியுள்ளது.

மேலும், தனது மொபைல் போனை ஐசிசியிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, வீரர் ஏ உடனான வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் அழைப்புப் பதிவுகளை அகிலேஷ் ரெட்டி திட்டமிட்டு அழித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆதாரங்களை அழித்ததும் விதிமீறலாகக் கருதப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version