61 பெண்களிடம் பாலியல் சீண்டல்: இந்திய வம்சாவளி மசாஜ் தெரபிஸ்டுக்கு 13 ஆண்டு சிறை!

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மசாஜ் தெரபிஸ்ட், 61 பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டில், அவருக்கு 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு புறநகர்ப் பகுதியான கிளென்எல்க்-இல் மசாஜ் தெரபிஸ்டாகப் பணிபுரிந்து வந்த 39 வயதான சுமித் சதீஷ் ரஸ்தோகி, 'மசாஜ் செய்கிறேன்' என்ற போர்வையில் பல பெண்களைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். மேலும், அரை நிர்வாண நிலையில் இருக்கும்போது பெண்களைத் தவறாகப் படம் பிடித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, அவர் மீது 55 முறை தவறான படம் பிடித்தல் மற்றும் 42 முறை பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவர் தகுதி பெறாத மசாஜ் பணியாளராக இருந்தபோது இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். 2022-ல் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர், ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, வாழ்க்கையில் நம்பிக்கையையும் இழந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஒரு பெண், தனது தேனிலவு சமயத்தில் இந்தத் துன்புறுத்தல் நடந்ததாகவும், இதனால் மருத்துவர்கள் உட்பட எந்த ஆணிடமும் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்மென் மேத்யூ, சுமித் சதீஷ் ரஸ்தோகிக்கு 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். தண்டனைக்குப் பிறகு அவர் நாடு கடத்தப்படுவார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version