உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணியின் ஜெர்சி நிறம் காவி நிறமாக மாற்றப்பட்டது குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கே விளக்கம் அளித்துள்ளார். பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை நடைபெறவுள்ள உலக கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு வழக்கமான நீல நிற ஜெர்சிக்கு பதிலாக காவி நிற ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஜெர்சி மாற்றம் குறித்து முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன்களான விரேன் ராஸ்கின்ஹா, பாஸ்கரன், அஜித் பால், பர்கத் சிங், தன்ராஜ் பிள்ளை உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கே கூறுகையில், 'இந்திய அணியின் ஜெர்சி தொடர்பாக நிறைய விமர்சனங்கள் எழுகின்றன. ஜெர்சியின் நிறத்தை மாற்றுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2014ல் மஞ்சள் நிறத்திலும், 2018ல் வெளிர் நீல நிறத்திலும் ஜெர்சி மாற்றப்பட்டுள்ளது. இம்முறை யாருடைய அழுத்தத்தினாலோ அல்லது கட்டளையின் பேரிலோ இந்த மாற்றம் செய்யப்படவில்லை. நமது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் விருப்பப்படியே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'ஹாக்கி மைதானத்தின் ஆடுகளம் நீல நிறத்தில் இருப்பதால், ஜெர்சியும் நீல நிறத்தில் இருந்தால் வீரர்களுக்கு விளையாடும்போது சிரமமாக இருக்கும். எனவே, மஞ்சள் அல்லது காவி நிறம் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில், தேசிய கொடியுடன் தொடர்புடைய காவி நிற ஜெர்சி தேர்வு செய்யப்பட்டது. இது நிரந்தரம் அல்ல. வரும் காலங்களில் வீரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜெர்சியின் நிறம் மாற்றியமைக்கப்படும்' என்று கூறினார்.
ஜெர்சி தொடர்பான விமர்சனங்களை கடந்து, உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் திலீப் டிர்கே கேட்டுக்கொண்டார். இந்த திடீர் ஜெர்சி மாற்றம் ஹாக்கி வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

