சென்னை கோட்டை கொத்தளத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி சிறப்பித்தார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒற்றுமையாக இணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். லஞ்சம் மற்றும் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கம் என்றும், கொள்கைக்கு எதிரான திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம் என்றும், அதே சமயம் நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் முழு ஒத்துழைப்பு நல்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் உரைக்குப் பிறகு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில், 'தகைசால் தமிழர் விருது' எம். கிருஷ்ணசாமி அவர்களுக்கும், 'டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் விருது' டாக்டர் வி. மோகன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும், துணிச்சல் மற்றும் சாகசச் செயலுக்காக வழங்கப்படும் 'கல்பனா சாவ்லா விருது' நௌஷீன் பானு சந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் நல்லாளுமை விருதுகள், லட்சுமி பவ்யா தண்ணீர், எஸ். சதீஷ் பிரபு, மற்றும் மருத்துவர் எம். கீதாஞ்சலி ஆகியோருக்கு வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறந்த சேவை புரிந்தமைக்காக, சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது ச. தினேஷ் குமார் அவர்களுக்கும், சிறந்த மருத்துவர் விருது ப. திருநாவுக்கரசு அவர்களுக்கும், சிறந்த நிறுவனத்திற்கான விருது சிருஷ்டி பவுண்டேஷனுக்கும், சிறந்த சமூகப் பணியாளர் விருது பா மணிமாறன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
மேலும், அதிகளவில் மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்திய சிறந்த நிறுவனமாக எம்.சி.எம் கார்மெண்ட்ஸ்ட் பிரைவேட் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்டது. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருதைப் பெற்றது.
சமூக நலன் மற்றும் சிறப்பான சேவைகளுக்காக, மகளிர் நலனுக்காகப் பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனமாக அட்சயம் டிரஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது. மகளிர் நலனுக்காகச் சிறப்பான சேவையாற்றிய சிறந்த சமூக சேவகர் விருதை இ. ராதா அவர்கள் பெற்றார்.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் பிரிவில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 6வது மண்டலம் முதல் பரிசையும், 2வது மண்டலம் இரண்டாம் பரிசையும் வென்றன. சிறந்த மாநகராட்சிப் பிரிவில், கோயம்புத்தூர் முதல் பரிசையும், தஞ்சாவூர் இரண்டாம் பரிசையும் பெற்றன.
சிறந்த நகராட்சிப் பிரிவில், தேனி போடிநாயக்கனூர் முதல் பரிசையும், திருவண்ணாமலை ஆரணி இரண்டாம் பரிசையும், விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சி மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றன. சிறந்த பேரூராட்சிப் பிரிவில், தஞ்சாவூர் திருவிடைமருதூர் முதல் பரிசையும், கன்னியாகுமரி கருங்கல்லு இரண்டாம் பரிசையும், கோவை செட்டிப்பாளையம் மூன்றாம் பரிசையும் பெற்றன. இந்த விருதுகள், அந்தந்த துறைகளில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பங்களிப்பைப் பறைசாற்றுகின்றன.

